vendredi 30 novembre 2007

திருவிழா


இந்த அலங்காரதுக்காகவாவது வேண்டும்
ஒவ்வொரு நாளும் நம்மூரில்
கோவில் திருவிழா

lundi 19 novembre 2007

நினைவுகள்

நான் உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
ஆனால் உன் நினைவுகளோ மறந்தும் மறையவில்லை

mardi 13 novembre 2007

அனாதை இதயம்


ஏதோ ஒரு மூலையில்
அனாதையாய் என் இதயம் !
உன் பதிலை எதிர்பார்த்தபடி

dimanche 11 novembre 2007

யாரவன் ?


இயல்பாய் பேசிக்கொண்டிருக்கையில்
இடையில் ஒரு சலனம்
யாரவன் ?
எங்கேயோ இருந்து கொண்டு
எனக்கின்பம் அளிப்பவன்
ஏதோ துணையாய் கிடக்க
அதன் மேல் சாய்ந்தேன் ஆதரவு தேடி
கண்கள் விழித்தே இருந்தும்
கனவு காணத்தொடங்கினேன்
கற்பனை கலந்த கனவு அது!
ஏதேதோ ஆசைகள் வந்து அலைமோத
ஆழ்ந்த சிந்தனையிலும்
என் உதட்டில் ஓர் புன் சிரிப்பு
முகம் தெரியாதவனுக்காய்
முழுதாக உறைந்திருந்தேன்

dimanche 4 novembre 2007

காத(ற்)கொலை















உன் கதை கேட்ட போது

உணர்ச்சிவசப்பட்டவர்களில் நானும் ஒருத்தி
என்னதான் நீ அவளைக் காதலித்திருந்தாலும்
உன் காலத்தை முடிப்பதற்காய்
நீ எடுத்த முடிவு தவறே
உன் காதலை புரியவைக்கத் தெரியாத உன்னை என்னென்று சொல்ல
உன்னை புரிய முயற்சி செய்யாத அவளை என்னென்று சொல்ல
அதை விடு
காதல் வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமே
அதற்காக உன்னையே நீ அழிக்கத்துணிந்தாய்
ச்சீ...உன்னையே வாழவைக்கத்தெரியவில்லை
அதனால் அந்த துணிச்சல் கூட ஒரு கோழை தான்
நீ ஒரு நொடியில் எடுத்த முடிவால்
இன்று நொந்து கொள்பவர் எத்தனை பேர்
உன்னை விரும்பாத ஒரே காரணத்துக்காய்
ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் "அவள்"
உன்னையே வழி நடுத்தத் தெரியாமல் "நீ"
இதில் காதல் என்ன செய்யும் ?
அது வாழவைக்குமே தவிர சாகடிக்காது
உன் காதல் கிட்டவில்லை..சரி
உனக்காய் வாழப்பிடிக்கவில்லையா
உன் பெற்றோருக்காவது வாழ்ந்திருக்கலாம்
உணர்ச்சிகள் பொங்க உடன் எடுத்த முடிவு
நீ ஒரு நிமிடம் யோசித்திருந்தால்...
இன்று நான் எங்கேயோ இருந்துகொண்டு
உனக்காக பேனா பிடித்திருக்க நேர்ந்திருக்காது
உணர்ச்சிகளை வெல்லத்தெரியவில்லை நீ வீரனா ??
உன் போன்றவர்களின் கதை கேட்பது
இன்றே இறுதியாக இருக்கவேண்டும்

vendredi 26 octobre 2007

ஏன் உன்னை மட்டும்?



இன்னொரு தடவை
"ஏன் என்னை காதலித்தாய்" என்று கேட்டு
என்னை கவிஞன் ஆக்காதே






வார்த்தைகளால் கொட்டுவதோ
நான் உணர்வதில் பாதிதான்
மீதி சொல்லத்தெரியவில்லை
நீயே வந்து உணர்ந்து கொள்
நானாய்!





திரைப்படம் பார்க்கையில்
துளிர் விட்ட விழிநீர்
பேருந்து ஜன்னலில்
ரசனையோடு உன் முகம்
இடறிவிழுந்த போது
இக்கட்டில் கூட வரைந்த உன் நாணம்
இசையோடு சேர்ந்து
இணையும் உந்தன் கானம்
புன்சிரிப்பால் பரவி
பேசுகின்ற இயல்பு
இப்படி சிறு சிறு காரணங்களே
நான் உன்னை மட்டும் நேசிப்பதற்கு


திருடித் தொலைக்காதே


தொலைத்தது கிடைக்கவில்லை
இனியும் தொலைத்துத் தேட விரும்பவில்லை
ஆனால் நீயோ உன்னைத் தொலைத்தும் கூட
திருட நினைக்கிறாய்

mardi 23 octobre 2007

டேய் பையா

ஆரம்பத்தில எங்களைப் பார்க்க வந்திருக்கும் புதிய பூவென்று தான் உன்னை நினைச்சோம்

உன் சின்ன விழிகள் எங்களை கூர்ந்து பர்த்தது இன்னமும் நினைவிருக்கு



உன் பிஞ்சு கையில் சிக்கித்தவித்த எம் ஒற்றைவிரல்


உன் இமைகளின் ஒவ்வொரு அசைவும்


தூக்கத்தில் கூட எம்மை கொள்ளை கொண்ட உன் குறுஞ்சிரிப்பு


எத்தனை தடவை கண்கொட்டாமல் பார்த்திருப்போம்


நீதானே என்று தாங்கிகொண்ட உன் சின்னச் சின்ன குறும்புகள்


உன் மாற்றங்களை எப்படி எப்படியோ ரசித்தோம்


உன் முதல் பார்வை


முதல் தீண்டல்


முதல் சிரிப்பு


முதல் அழுகை



முதல் அடிவைத்த பாதங்கள்



முதல் முத்தம்


முதல் வார்த்தை
"அம்மா"
எத்தனயோ தடவை ஏங்க வைத்தாய்
சிரிக்க வைத்தாய்
டேய் பையா உனக்கு 60 ஆனலும்கூட
எமக்கு நீ இன்னமும் செல்ல குழந்தைதான்
உன்னோடிருப்பதே எமக்கு உலகமாய் போய்விட்டது

lundi 22 octobre 2007

கண்ணீரில் கரைபவன்


இவன் இதயத்தின் குமுறல்களை
இதுவரை எவர் அறிந்திருப்பார்
அவனது தலயணைக்கு மட்டும் தெரிந்திருக்கும்
அவனோடு சேர்ந்து நனைந்த நாட்களை
ஆறுதல் சொல்லா அம்மாவாய் எவரும் இல்லை
கனவுகள் மட்டும் அவன் கண்ணீர் துடைக்கும்
இசை சேர்ந்த இரவுகள் இன்னல்களை அகற்ற
நிஜத்தில் கண்ணீரில் கரைபவன்
நித்திரையிலாவது நிம்மதியால் நிறையட்டும்

samedi 20 octobre 2007

மடல்


உன் மடல் கிடைத்ததும்
உயிரே திரும்பி வந்ததாய் ஓர் உணர்வு
அதில் ஒவ்வொரு எழுத்திலும்
உன் உருவங்கள், உன் பாவனைகள்
முத்திரைக்குப் பதிலாக
உன் இதயத்தை ஒட்டி வைத்தாயா?

vendredi 19 octobre 2007

தாகம்


பூமியின் தாகம் தீர்த்தது
பூவின் கண்ணீர்த்துளி


வந்துவிடு


மறந்து விடு
என்னையும் உன்னையும் தவிர
உலகத்தில் அனைத்தையும் மறந்து விடு
ஒரு துளி நிமிடங்கள்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாழ்ந்தாவது சாவோம்
பாரமான இதயத்திற்கு
விடுமுறை நீயும் கொடுத்து விடு
இயல்பாக என்னை
இன்றாவது நெருங்கி விடு
எத்தனையோ காலங்கள்
இந்த நிமிடத்திற்காய்
காத்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்
இப்பொழுது மட்டும்
எனக்கே எனக்காய் வாழ்ந்திடேன்!

lundi 15 octobre 2007

என் பேருந்துப் பயணம்



















கண் தெரிந்தும் கண்ணாடி போட்டு கவர விரும்பும் ஓர் அழகன்
கண்ணிழந்தும் இருளில் கூட ஒளி தேடும் ஓர் மனிதன்
இயலாதவளுக்கு துணையாய்ச் செல்லும் ஈடில்லா ஒர் தோழி
பார்வையாலே பேசிக்கொள்ளும் நரைவிழுந்த காதலர்கள்
தொலைத்த வாழ்வை தொலைபேசியில் தேடுகின்ற ஓர் இளைஞன்
இப்படி இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள்
இவர்களுக்காகவே இன்னும் தொடர வேண்டும்
என் பேருந்துப் பயணம்

முதல் கவிதை


அண்ணாவின் பார்வைக்காய்
அறியாத பெயர் போட்டு
அந்நியரின் கவிதையென
அறிவித்த சிறு பொய்
என் முதல் கவிதை

vendredi 12 octobre 2007

இது மலர்கள் தூங்கும் நேரமா
























இது மலர்கள் தூங்கும் நேரமா
இந்த நிலவு தூங்கும் நேராமா
என் இமைகளின் துடிப்பு
உன் இரவினைத் தொலைக்குமா
என் இதழ்களின் பாடலோ
உன் கனவினைத் தீண்டுமா
அதிகாலை விடியும் வரை
அசையாது பார்த்திருப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
உன் கனவோடு சேர்ந்திருப்பேன்

காற்றோடு உன் கூந்தல்
கலையத்தான் விடுவேனா
கண்ணோடு உன் இமையும்
பிரியத்தான் விடுவேனா
இரவிரவாய் உனை நானும்
இமைக்காமல் ரசித்திருப்பேன்
இதயத்தின் ஓசைகளை
உயிர்வரையில் கேட்டிருப்பேன்

என் தூக்கம் தொலைத்து நானோ
உன் விரல்கள் வருடிடுவேன்
தொல்லை மறந்து நீ தூங்க
தோளாக நான் இருப்பேன்
சுவாசிக்க நீ மறந்தால்
காற்றோடு நான் கலப்பேன்
அழகான உன் முகத்தை
அழியாமல் பார்த்திருப்பேன்

mercredi 10 octobre 2007

ஒரு வார்த்தைக் கவிதை






உன் பெயரை தெரிந்த நாளில் இருந்து
ஒவ்வொரு நாளும் உச்சரித்தேன்
அந்த ஒரு வார்த்தைக் கவிதையை

dimanche 7 octobre 2007

காதல் என்பது












காதல் என்பது...


இரவினில் நேரம் பார்ப்பது...
இசையினில் கனவு காண்பது...

தனிமையில் பேசி ரசிப்பது...
தனக்குள்ளே நினைத்து சிரிப்பது...

காத்திருந்து கரைந்தே போவது...
குறைகளை ஏற்க மறுப்பது...
பார்வையால் பேசிக்கொள்வது...
பார்த்ததும் பசி மறப்பது...

கவிதைகள் எழுதவைப்பது...
கண்ணாடி முன் காலம் போவது...

நிலவினில் முகம் தெரிவது...
நினைவுகளே வாழச்செய்வது...

samedi 6 octobre 2007

நீ... நானாய்



பேருந்தில் ஜன்னலாய்
பக்கத்தில் தோழியாய்
இரவினில் போர்வையாய்
மழையினில் குடையாய்
தனிமையில் துணையாய்
என்னோடு எப்பொழுதும்
நீ... நானாய்!


இந்த ஒரு பார்வைக்கு
அகராதியில் கூட இல்லை

இவ்வளவு அர்த்தங்கள்






நாம் பேசுவது தீர்ந்த பின்னும்
நம் மௌனங்கள் தொடர்கின்றன



கனவுகளில் வாழ்ந்தவன்
என் கண்முன்னே நின்ற போது
நிஜங்களையும் நம்பாமல்
நேரிலேயே கனவு கண்டேன்




இந்த உலகத்தை பார்த்த போதல்ல
உன்னைப் பார்த்த போது தான்
-நான் அறிந்தேன்
கண்களின் அருமையை

mardi 26 juin 2007

இப்படியும் கூட

உன் கண்ணீர்த்துளிகளை உன் இமையே விழாது தடுக்கும் போது
எப்போதும் உனைத்தாங்க விரும்பும் நான் அவற்றைச் சிந்த விடுவேனா?

நிஜங்களே சிலவேளை உடைந்து போகையில்
நிழல்களை எப்படி நம்புவது?

அம்மா, உன்னால் இன்று இங்கே...

நிலா முற்றத்துக்காக பதிவேட்டுப்பகுதியில் எழுதியது...





வணக்கம் உறவுகளே. எல்லோரும் நலந்தானா ? இங்கே பதிவேடு என்ற பகுதியை வாசித்தபோது எனக்கும் ஏதோ ஒரு சிறு ஆசை நானும் ஏதாவது இங்கு எழுதணும் என்று. எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் சிறு கதை ஒன்று இருக்கு.அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்து இருக்கேன். என்னையும் இணைப்பீர்கள் என்று எதிர்பார்த்து இதோ அதை எழுதுகிறேன்.

அதற்கு முன்னாடி சிறு விடயம் ஒன்று ; இங்கு நான் எழுதுவது என்னில் ஞாபகம் இருக்கும் சில காட்சிகளை மட்டுமே. மறந்ததை எவ்வளவோ தேடிப்பார்த்தாலும் ஞாபகத்துக்கு வர மறுக்கின்றன.

இருந்தாலும் சிலவற்றை ஒன்றுகூட்டி இங்கே எழுதுகிறேன்.

எனக்கு ஒரே ஒரு அண்ணா, குடும்பம் என்று சொன்னால் அப்பாவும் அம்மாவும் தான். உங்களைப்போலவே நானும் பெருங்குழப்படிகள் செய்து சிறு திட்டுக்கள், அடிகள் நிறைய வாங்கியிருக்கேன். அதை இப்பொழுது நினைத்தால் கூட சிரிப்புவந்து எட்டிப்பார்க்கும்.
இப்படி சாதரணமாய் போய்கிட்டு இருந்த நம் வாழ்வில் ஒரு திருப்பம்...

எனக்கு அப்போது 4 வயது இருக்கும். ஒரு நாள் நாங்கள் எல்லோரும் ஒரு திருமண வீட்டுக்குச் செல்வதற்காய் ஆயத்தம் பண்ணிக்கிட்டு இருந்தோம். அந்த வயசில் கூட நான் எத்தனை தடவை என்னைக் கண்ணாடியில் பார்த்தேன். ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யும் போதும் ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் பார்த்து ரசித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்படியே அம்மா எல்லோருக்கும் ஆயத்தம் படுத்த உதவி செய்திட்டு அவங்க தனக்கு ஒன்றும் பண்ணவில்லை. அதன் பிறகு ந்டந்தது ஞாபகம் இல்லை. ஆனால் அம்மா தான் திருமணத்துக்கு வரவில்லை என்றும் தன்னை விட்டுவிட்டு எங்களைப் போக சொன்னா. அப்பா எவ்வளவு வற்புறுத்தியும் அவங்க வர விரும்பவில்லை.பிறகு திருமணத்தில் எல்லோரையும் சந்தித்தேன். நன்றாக நினைவிருக்கிறது. பாட்டியையும் மற்றவங்களையும் பார்த்தேன். திருமணம் இனிதே நிறைவேற நானும் என் அண்ணாவும் என் அப்பாவும் மோட்டார் வண்டியில் வீடு திரும்பினோம். அங்கு வீட்டில் அம்மா இல்லை. வீடு முழுவதும் பூட்டி இருந்தது. அப்பா சொன்னார் பக்கத்துவீட்டுக்கு எங்கேனும் போய் இருக்கலாம் பார்த்துவிட்டு வாங்கோ என்று. நானும் என் அண்ணாவும் எல்லோர் வீட்டிலும் ஓடிஓடிச் சென்று பார்த்தது இன்னமும் கண்முன்னே தெரிகிறது. தேடியும் ஓடியும் பார்த்துப் பிரஜோனம் இல்லை.
அப்பாவும் அவர் பங்குக்கு அம்மா எங்கு எல்லாம் வழமையாக போவாரோ அங்கு சென்று தேடிக் களைத்து தோல்வியோடு வந்தார்..நேரம் போகப் போக எங்கள் முகத்திலும் இருள் சூழ்ந்து கொண்டது. கதவுகள், ஜன்னல்கள் முற்றுமாகச் சாத்தப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்கவும் வழியில்லை. அப்பாவிடம் வேறு சாவி இருக்கவில்லை. அம்மா வீட்டில் தானே இருக்கிறார் என்று அங்கேயே வைத்து விட்டு திருமணம் வந்தார். வெளியில் நின்று அம்மாவைக் கூப்பிட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நேரம் போய்க்கொண்டிருக்கிறது நமக்குப் பொறுமையில்லை. என் அப்பா உடனே ஒரு கோடரி எடுத்து வந்து கடைக்கதவைப் பிளந்தார். . ஆமாம் என் தந்தை வீட்டோடு ஒரு கடை வைத்திருந்தவர். அது எனக்கும் அண்ணாக்கும் ரொம்பவே சௌகரியமாக இருந்தது ஏனெனில் நிறைய இனிப்புக்கள் இருக்கும். எடுத்துச் சாப்பிட முடியும் சிலவேளை அப்பாவின் அனுமதியோடு, சிலவேளை அவர் கண்களைக்கட்டிவிட்டு........

கடைக்கதவு மரத்தினால் செய்யப்பட்டது என்பதினால் அது இலகுவாக பிளக்க வசதியாக இருந்தது. கடைசாமான்கள் எல்லாம் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தாலும் வெளியில் இருந்து உள்ளே செல்வது கடினமாக இருந்தது.நிறைய தடைகள் போடப்பட்டிருந்தது. கடையில் பொருட்கள் வாங்க வருவோர் அனுமதியின்றி உள்ளே நுளையக்கூடாதென்பதற்காக அப்பாவின் ஏற்பாடு. எல்லாவற்றையும் நீக்கி உள்ளே சென்றார் என் அப்பா. நான் அவரைப் பின் தொடர்ந்தேன். என் அண்ணா வெளியிலே நின்றுகொண்டிருந்தார். உள்ளே மெல்லிய இருட்டு. அந்தக்காலத்தில் எமக்கு மின்சார வசதியும் இருக்கவில்லை. கடைக்குப் பின்னாலே இன்னோர் சிறு அறை. அந்த அறையில் தான் கடையின் மிச்ச மிகுதிப்பொருட்களை வைப்பார் என் அப்பா. உள்ளே நுளைந்தோம் அங்கே நாம் கண்ட கோலம்... யாரும் காணக்கூடாத கோலம்... அதைக்கண்ட என் அப்பா "ஐயோ அம்மா" என அலறினார். எப்படிப்பார்த்தேன் என் அம்மாவை!!! சின்ன மேசை ஒன்று அவர் முன்னே தள்ளப் பட்டிருந்தது பின்னாடி அவர் சேலையில் (முன்பு எனக்கு அந்தச் சேலையின் நிறம் கூட ஞாபகத்தில் இருந்துச்சு ஆனால் இப்பொழுது அது மறைந்து விட்டது). அவங்க கால்கள் தரையைத்தொடவில்லை. அம்மாவின் கழுத்துக்கும் அந்த அறையின் உட்கூரைப் பகுதிக்கும் ஒரு தொடர்பு......அது ஓர் கயிறு....... என் அம்மா தூக்கில்.....கழுத்து கயிற்றால் நெரிக்கப்பட்டு....வேணாம்ங்க தொடர்ந்து சொல்ல முடியல....அப்பா கதறிக்கொண்டே இருந்தாரு. எனக்கு அழுகை வந்திச்சு என் அம்மாவைப் பார்த்தல்ல, என் அப்பாவில் கண்ணீரைப்பார்த்து. இந்தக் குணம் எனக்கு இப்பவும் இருக்கு யாராச்சும் அழுவதைப்பார்த்தால் நானும் ஆரம்பிச்சுடுவேன்! அந்த வயதில் விபரங்கள் குறைவாய் இருந்ததினால் எனக்கு நடப்பவை புரியவில்லை.

பின்பு எல்லோரும் வருகிறார்கள்...பக்கத்து வீட்டினர், உறவுகள் என்று பலர்.....என்னென்னமோ நடந்தது புரியவில்லை...ஏதோ எல்லாம் பேசினார்கள் எனக்குப் புரியவில்லை. ஏனோ அழுதார்கள் விளங்கவில்லை...என் அம்மாவைப் பெத்தவர்களின் வலியைச் சொல்லவா முடியும்!!!! அன்றிலிருந்து எத்தனையோ மாற்றங்கள்.... சந்தேகங்கள்....கேள்விகள்... . நான் சிறுவயதில் அம்மா எங்கே போயிருக்காங்க என்று கேட்டால், "சாமி"கிட்ட என்று பதில் வந்திருக்கிறது அதனாலோ என்னமோ இப்பொழுது கண்களுக்குத்தெரியாத கடவுள்களைப் பிடிப்பதில்லை. அதற்குப் பிறகு என் வீட்டில் இருந்த ஒரு முருகன் படத்தைப் பார்த்துக்கூட உள்ளுக்குள் பயந்திருக்கேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். அழகான உருவத்தை பார்த்து பயந்திருக்கேனென்று;(கடவுள்களின் உருவப்படம் மீது ஏனோ பிரியம் பொதுவாக அவற்றை அழகாக வரைந்திருப்பாங்க). இதில் இன்னொரு விஷயம் என்னென்றால் என் அம்மா இறந்த காரணத்தை இது வரையில் யாரும் அறிந்ததில்லை.எவருக்கும் தெரியவில்லை. இன்று கூட என் பாட்டி(அம்மாவின் அம்மா ) என் அம்மாவுக்காக கண்ணீர் சிந்தாத நாள் இல்லை. எத்தனை சொந்தங்கள் என் அம்மாவின் நிழலில் இருநக்கையில் எது அவரைதூண்டியது இந்த முடிவு எடுக்க ?பதில் இல்லாத வினாக்கள் இன்னும் நம் மனதில்!!! சிறு காலத்துக்கு முன் என் பாட்டியிடம் தெரிந்து கொண்ட ஒன்று: என் அம்மா இறக்க முன்னாடி எழுதிய கடிததில் இப்படி இருந்ததாம்"பிள்ளைகளை கவனமாகப் பார்க்கவும்"

நான் யாரிடமும் எதுவும் தற்சமயம் கேட்க விரும்பவில்லை!!! காலங்கள் மாறி..... காயங்கள் மாறி.... மனிதர்கள் மாறியிருக்கும் இந்தநிலையில் எதையும் ஞாபகப் படுத்தி புண்படுத்த விரும்பவில்லை.

நண்பர்களே இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளக் காரணம் இருக்கிறது!

வாழ்கை ரொம்ப சுலபமானதே அதை ஏன் இப்படிச் சிலர் சீரழித்துக் கடினமாக்குகிறார்கள்! தேவையின்றி குழப்பங்கள்.... பின் ஆயிரம் கேள்விகள்; வேண்டாமே .........

சில சமயங்களில் உள்மனதால் என் அம்மாவைத் திட்டியிருப்பேன்....சில தருணங்களில் நன்றி சொல்லியிருக்கேன்.இப்போ நான் உங்களோடு பேசுவது கூட ஒருவகையில் என் அம்மாவின் இந்த முடிவினால் தான்.

அம்மா! உன்னால் இன்று இங்கே.....

அதை விடுவோம்!!! வாழ்வை அணு அணுவாய் ரசிப்போம்! rolleyes.gif
அன்னையர் தினத்தை நான் கேட்டுக்கிறது ஒன்றே ஒன்றுதான்(எனக்கும் சேர்த்தே)

உலகத்தில் உள்ள அனைத்து தாயையும் நேசிப்போம்!!! ஏன் குழந்தைகளைக் கூட(அவர்கள் தரும் அன்பு கூட எதோ ஒருவகையில் தாய்ப்பாசமே smile.gif )

இதோடு இந்தப் பதிவேட்டை முடிக்கிறேன். சந்திப்போமா அனைவரும் சந்திப்போமா ?...... biggrin.gif

-உங்கள் அன்பு (இணையத்) தோழி
தயா

காத்திருந்தது கனவாய்...


பதில் தெரியாக் கேள்விகளும்
பகலில் கண்ட கனவுகளும்
சொல்லாமுடியா ஏக்கங்களும்
சூழ்ந்தே இருக்கும் கவிதையுமாய்
கண் தெரிந்த குருடி நான்
கால் கடுக்கக் காத்திருந்தேன்
-காலத்தின் வேகத்தை மறந்தே

கவிதையின் பிடிவாதம்


உன்னை விரும்பியபோது எனக்குள் பூத்த முதல் கவிதை
உன்னையே மறக்க நினைக்கும் போது நீங்க மறுக்கின்றதே ஏன் ?

samedi 17 mars 2007

உயிருக்குள் உறைந்தது


உயிருக்குள் உறைந்தது எழுந்து வழியுதே
உனைதனைப் பார்த்ததும் எழுதச் சொல்லுதே
சிறு சிறு கணத்திலும் வாழ்க்கை இனிக்குதே
சிறகில்லா மனம் கூட வானைத்தாண்டுதே

தொலைவினில் பார்த்ததும் என் முகம் மலர்ந்தது
தொல்லைகள் துயரங்கள் எங்கோ தொலைந்தது
விழிகளில் இமையோ இசையாய் துடிக்குது
வித விதமாய் பல கனவுகள் பிறக்குது

உதடுகள் என்றும் உன் பெயர் சொல்லுதே
உறக்கத்தில் கூட உன்னை அழைக்குதே
குறுகுறுப்பார்வைகள் என்னுயிர் கொல்லுதே
கூட்டத்தில் உன்னை என் மனம் தேடுதே

உன் குரல் கேட்கையில் உயிரில் ராகங்கள்
உன்னுடல் தீண்டலில் உருகும் பாடல்கள்
உன்னெதிரே வருகையில் உலகம் என் கையில்
உருவம் இல்லா இந்த உணர்வுதான் என்னவோ ?

என் தவறு எங்கே ??

ஏதோ ஒரு நினைப்பில் எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு : "விவாகரத்து செய்தவரின் குழந்தைகளின் உணர்வுகள் எப்டி இருக்கும்?" என்று
அப்போ கிறுக்கிய ஒன்று உங்கள் பார்வைக்கு.



என் தவறு எங்கே ??

ஏன் அன்று நான் பிறந்தேன்
இவர் காதல் விதையாக?
ஏன் இன்று நான் விரிந்தேன்
இரு சோக கிளையாக?

எந்தன் தவறு எங்கே... எங்கே?

திருமணத்தில் அன்று இணைந்து
இருமனமாய் இன்று பிரிந்தீர்...
வெறும் மனமாய் தவிக்கும் பிள்ளை
உங்கள் விழிதனிலே தேடுகிறேன்...

எந்தன் தவறு எங்கே.. எங்கே?

நேற்று வாழ்ந்தது தாயின் வீட்டில்!
நாளை வாழ்வது தந்தை வீட்டில்!
தனிக்குழந்தை நானோ
-எனக்கு
இரு மனைகள், புரியவில்லை!

எந்தன் தவறு எங்கே... எங்கே?

பிரிவின் காரணம் என்ன என்றால்
உரிமை என்று பதிலும் வருது!
எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்
எனது உரிமை இங்கு எங்கே...எங்கே?

எந்தன் தவறு எங்கே... எங்கே?

mercredi 7 mars 2007

கனவா என்று கண்ணைக் கேட்டேன்

mardi 6 mars 2007

நெரிசலின் நடுவில்...


பேருந்தில்,
நெரிசலின் நடுவில்...
நீயும், நானும்...
ஒருவர் எதிரில் ஒருவராக...
ஒன்றாக...
சுவாசம் இரண்டும் ஒன்றையொன்று மோதிட...
தூண்டில் விழிகள் சண்டை போட்டு இழுக்க...
இடையிடையே சில வார்த்தைகள்...
பலதடவை இதழ்கள் மலர...
பேருந்து முழுவதும் ஏதேதோ சலசலப்பு
நாம் இருவரும் அமைதியில் தவழ...
ஆனாலும் பேசினோம்
பார்வையால்...
மௌனத்தால்...
தீண்டலால்...

lundi 5 mars 2007

உன் பெயர்

mercredi 28 février 2007

வந்து விட்டாய்


வந்து விட்டாய் நீ வந்து விட்டாய்
என் வாழ்வில் ஏதோ செய்துவிட்டய்
என்ன செய்தாய் அட என்ன செய்தாய்
என்னையேன் இப்படி மாற்றிவிட்டாய்

குழந்தையின் குறும்பு இத்தனை அழகா
குடையில்லா மழையில் இத்தனை சுகமா
இசையுடன் பயணம் எத்தனை இனிமை
இருட்டினில் மட்டும் ஏன் இந்த தனிமை

கனவினில் உந்தன் முகம் கலையதா ஓவியம் போல்
தினசரி வந்து என்னை தித்திக்க வைப்பது ஏன்
எங்கோ தொலைந்த என் பார்வை
உன் கண்களைக் கண்டதும் மோதியதேன்

கனவுகளும் நினைவுகளும் கண்ணெதிரே தோன்றுதே
இனிக்காத்திருக்காத்திருக்க தேவயில்லை கண்கள் உனைக்கண்டதே
எதிரினிலே, என்னருகினிலே நீயிருந்தாய் போதுமே
இனி வேறெதுவும் தேவையில்லை எனக்கிது போதுமே